ஆந்திராவில் சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்ற லாரியின் முன்புறம் ஏறி தட்டிக்கேட்ட ஊழியரை, லாரி ஓட்டுநர் 10 கி.மீட்டருக்கு தூக்கிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அமக்கநாடு டோல்கேட்டிற்கு வந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஒன்று நிற்காமல் வந்தது. அப்போது அந்த லாரியை நிறுத்த டோல்கேட் ஊழியர்கள் போன் செய்து தெரிவித்துள்ளனர்.
இதைதொடர்ந்து அமக்கதாடு டோல்கேட் ஊழியர் சீனிவாசலு சம்பந்தப்பட்ட ஹரியானா லாரியை மடக்கி நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் ஓட்டுநர் முந்தி செல்ல முயன்றதை அடுத்து டோல்கேட் ஊழியர் சீனிவாசலு, லாரி பம்பர் மீது ஏறி நின்று லாரியை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் லாரி ஓட்டுநர் சுமார் 10 கி.மீட்டர் தூரம் வரை சீனிவாசலு பம்பர் மீது இருந்த நிலையிலேயே லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த வந்த தேசிய நெடுஞ்சாலை போலீசார் வெல்துர்த்தி அருகே லாரியை நிறுத்தி சீனிவாசலுவை மீட்டு லாரி ஓட்டுநரை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.